கடுமையான குளிருடனான காலநிலை - முல்லைத்தீவில் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததோடு கடுமையான காற்று மற்றும் கடும் குளிரான சூழல் நிலவியது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பல நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன.
குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக அறிய கிடைக்கின்றது. அதனை விடவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை திரட்டும் பணி இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்

எவ்வாராயினும் இந்த கால்நடை இறப்பின் மூலம் பல பண்ணையாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து நிற்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் முதல் இன்று வரை கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் வழங்கப்படாமை காரணமாக கால்நடைகளுக்கு உரிய உணவு கிடைக்காமையுமே இதற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
காரணம்

மேலும் தங்களுக்கான மேச்சல் தரவைகள் இல்லாத நிலையில் அந்த கால்நடைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கலே இவ்வாறான உயிரிழப்புக்கு காரணமெனவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.








