மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேடு....! மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
வீதியில் புனரமைப்பு பணிகள்
அந்த வீதியானது புனரமைப்புக்காக கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்காக நாங்கள் வீதி ஓரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாது, தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன.
இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம். இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர்.
வீதிக்கு வந்த மூலப்பொருட்கள்
பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை.
குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம்.
காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம். சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார்.
உடனடியாக நடவடிக்கை
மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார். அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார்.

அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை, இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம்.
இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன.
எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்