நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்ற சந்திப்பு! தமிழரசுக்கட்சி தொடர்பில் குற்றச்சாட்டு
தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே சந்திப்பு துரிதப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதி விருப்பத்தோடு இதில் பங்கு பற்றவில்லை. அந்த விருப்பமின்மை அவருடைய பதில்களிலிருந்தும், முகபாவனையிலிருந்தும், நீண்ட இழுத்தடிப்பிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.
திருகோணமலை புத்தர் சிலை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தால் தமிழ்த்;தரப்பு தூர விலகிச் செல்லக்கூடாது என்பதும் சந்திப்புக்கு காரணமாக இருக்கலாம். சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களுக்கு கால வரையறை எதனையும் ஜனாதிபதி கூறவில்லை. தெளிவான பதில்களையும் கூறவில்லை.

தொடர் பேச்சுவார்த்தைக்கான திகதிகளும் குறிப்பிடப்படவில்லை. பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், ஆக்கிரமிப்பு விடயங்கள் என பல விடயங்கள் பேசப்பட்டன. அரசியல் தீர்வு பற்றியே அதிக நேரம் பேசப்பட்டது.
சுமார் 1 1/2 மணி நேரம் நடந்த உரையாடலில் சுமந்திரனே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார். ஏனையவர்களுக்கு சொற்ப நேரங்களே வழங்கப்பட்டன. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளர், உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
சுமந்திரன் அரசியல் தீர்வு பற்றி கருத்துக்களை கூற ரவிகரன், சத்தியலிங்கம், குகதாசன் ஆகியோர் ஆக்கிரமிப்புகள் பற்றிய கருத்துக்களைக் கூறினர். சிறீதரன் பொதுப்படையாக சகல விடயங்களையும் தொட்டு கருத்துக்களைக் கூறினார்.
ஏக்கியராச்சிய” தீர்வு
ஜனாதிபதி அனைவருடைய கருத்துக்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். முதலில் சிவஞானம் தான் உரையாடினார்.

அவர் சிங்களத்தில் பேச முற்பட ஜனாதிபதி மூன்று மொழிகளில் எதிலும் பேசலாம் நான் மொழிபெயர்ப்புக் கருவிகளை பொருத்தியுள்ளேன் எனக் கூறியிருந்தார். அந்தக் கருவி வெளிப்படையாக தெரியாத வகையில் பொருத்தப்பட்டிருந்தது.
அரசியல் தீர்வு விவகாரம் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையையே மையப்படுத்தியிருந்தது. ஏக்கியராச்சிய தீர்வு யோசனையை கடைசி வரையும் ஏற்க மாட்டோம் எனக் கூறியிருந்த சிவஞானமே அதனைத் தொடக்கி வைத்தார்.
சுமந்திரனின் கட்டளையை மீறிச் செயற்படும் ஆளுமை அவருக்கு இருக்கவில்லை. சிவஞானம் ஆரம்பத்திலேயே சமஸ்டி என்ற பதம் முக்கியமில்லை. சமஸ்டி முறைமையே முக்கியம் எனக் கூறியிருந்தார், இவ்வாறு கூறும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தார்களோ தெரியவில்லை.
தமிழ் மக்கள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. பெயரில்லாமல் உடல் இருந்தால் மட்டும் போதும் என்ற வகையிலேயே அவரது கருத்து இருந்தது. பெயரை மறைத்து வைத்து விட்டால் சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என அவர் கருதுவது போலவே தெரிகின்றது.
சிங்கள மக்களை அடி முட்டாள்களாக அவர் நினைத்திருக்கலாம். சமஸ்டி ஆட்சி முறையின் அவசியத்தை சிங்கள மக்களுக்கு கூற வேண்டியது சிங்கள அரசியல் சக்திகளின் கடமை என்பதை தெளிவாக வலியுறுத்துவதற்கு பதிலாக பெயர் தேவையில்லை, உடல் தான் முக்கியம் என்கின்ற குறுக்கு வழியில் சிவஞானம் செல்லப் பார்க்கின்றார்.
தொடர்ந்து “ஏக்கிய ராச்சிய” தீர்வு யோசனை பற்றி சுமந்திரனே பேசினார்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |