மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு
ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளை நோக்கி படகில் பயணித்தபோது, மத்தியதரைக் கடலில் உணவு, தண்ணீரின்றி 15 நாட்கள் தத்தளித்த நிலையில் இருந்த வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரு புலம்பெயர்ந்தோர் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் பயணம் செய்ததாக கூறப்படும் மேலும் 17 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதி வெளியிட்ட அறிக்கையின்படி, மல்லோர்கா தீவின் தென்மேற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் (0100 GMT) இந்த இருவரும் மீட்கப்பட்டனர்.
கடுமையான நீரிழப்பு
நீரிழப்பு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, அவர்கள் பயணித்த படகு 15 நாட்களாக கடலில் தத்தளித்ததாகவும், தங்களுடன் இருந்த மற்ற 17 பேரும் அந்தக் காலப்பகுதியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், உயிர் தப்பிய இருவரின் வாக்குமூலத்தைத் தவிர, அந்த 17 பேர் குறித்து வேறு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.
இதையடுத்து, ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் ஹெலிகாப்டரை அனுப்பி தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |