89 போலி நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி!
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 89 நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பாதித்த பணம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைத் தனது நிறுவனக் கணக்குகளில் வைப்புச் செய்து அவற்றை கவனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பைக் குறைத்துக் காட்டி சுங்க மற்றும் தீர்வைகள் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றிப் போலி இறக்குமதி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர் பணம் அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணத்தைச் சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம், நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கடுமையான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலதிக விசாரணைகள்
இலங்கை சுங்கத்துறையால் காவல்துறை மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் 2025 செப்டம்பர் 15 வரை நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 89 உள்ளூர் நிறுவனங்களைப் பயன்படுத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் தந்தி வழிப் பணப்பரிமாற்ற முறை (TT – Telegraphic Transfer) மூலம் உள்ளூர் வங்கி அமைப்பின் வழியாகப் பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு நாட்டிற்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே இந்தப் பெரிய அளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |