நாட்டில் கோடிக்கணக்கில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ! அஜித் ரோஹண வெளியிட்ட தகவல்
சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த விசாரணை பிரிவினால் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
சொத்துகள் மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளில் விசாரணைகளை மேற்கொண்டு சிறந்த அனுபவமிக்க அதிகாரிகளுடன் இந்த விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு பெறப்படுகின்ற பணத்தின் ஊடாக ஈட்டப்படும் சொத்துக்களுக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் 1,100 பேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் 325 பேர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.