நாளை ஆரம்பமாகும் ஜெனீவா கூட்டத்தொடர் : இறுதி நேரத்தில் விஜிதவின் பயணம் இரத்து
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள இந்த அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் இம்முறை பங்கேற்க மாட்டார் எனவும், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திரத் தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ உறுதிப்படுத்தியுள்ளார்.
எழுத்துமூலமான அறிக்கை
எனினும் குறித்த பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பில் அவர் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமும் நடைபெறவுள்ளது.
சர்வதேசத்தின் கடுமையான கவனத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |