இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இந்திய (India) கடற்றொழிலாளர்கள் இலங்கை (Sri Lanka) கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நெடுந்தீவு பகுதிக்கு நேற்று (29) பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துமீறல்
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராஜதந்திர நடவடிக்கை
இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கடற்படையினருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குத்துறை பிரச்சினை சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, நெடுந்தீவு மக்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நெடுந்தீவு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
