உதவி ஆசிரியர் நியமனத்தில் இழுபறி..! கல்வி அமைச்சிற்கு பறந்த கோரிக்கை
2,665 உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசேகரவுக்கு கடிதமொன்றை அனுப்பி, இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையகப் பெருந்தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் 2023 ஆம் ஆண்டு 2,665 உதவி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுமார் 14,000 பேர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். பரீட்சை நடைபெறவிருந்த சமயத்தில், அதற்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நியமன ஏற்பாடுகள் தடைபட்டுள்ளன.

இந்தத் தடை உத்தரவு கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளதால், கல்வி அமைச்சு இந்த வழக்கைச் சரியான முறையில் எதிர்கொண்டு, அல்லது சமரசமாகத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலையக மாணவர்களினதும், நியமனத்துக்காகக் காத்திருக்கும் இளைஞர் யுவதிகளினதும் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |