மோடியின் இலங்கைப் பயணம் திடீரென ரத்துச் செய்யப்பட்டது ஏன்?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்தப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும் அதன் பின்னர் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையிலேயே அவரது இலங்கை பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான பயணத்தை நிறுத்திவிட்டு இணையத்தள தொழிற்நுட்பம் ஊடாக பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்ற மோடி தீர்மானித்தள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் வெளியிடுவதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தவிர்த்துக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
