சர்வதேச சட்டங்களை உருவாக்கும் ஐ.நா குழுவுக்கு மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரை - வெளியானது எதிர்ப்பு
சர்வதேச சட்டங்களை உருவாக்கும் ஐக்கிய நாடுகள் குழுவுக்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொஹான் பீரிஸின் பதவி காலத்தில் ஸ்ரீலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கான 34 உறுப்பினர்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஐந்து வருடங்களுக்கு பதவி வகிக்கவுள்ளனர்.
அந்த குழுவிலிருக்கும் 34 உறுப்பினர்களில் எட்டு பேர் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளதோடு அந்த எட்டு இடங்களுக்கு பத்து பேர் போட்டியிடவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சார்பில் அந்த ஆணைக்குழுவிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த நியமனத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென உலக நாடுகளை உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன.
மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக செயற்பட்ட காலத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னர் நிறுத்த அவர் தவறியிருந்ததாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உலகளவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுபவர்களும் சட்டவாளர்களும் இந்த நபருக்கு வாக்களிக்க வேண்டாமென, ஐ.நா பொதுச் சபையிலுள்ள உறுப்பு நாடுகளை வலியுறுத்த வேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டது. கொல்லப்பட்டது, கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது அல்லது பணிகளைச் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டது ஆகியவை நடைபெற்ற போது மெஹான் பீரிஸ் தலைமைப் பொறுப்பில் இருந்ததாக, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் பாஷன அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவரது செயற்பாடு மற்றும் ஸ்ரீலங்கா அரசு ஆகியன செய்த தவறை மூடி மறைக்க முயன்ற இவரது நியமனத்திற்கு எதிராக உலகம் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டுமென என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.