அரச தலைவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்றது - வாசுதேவ நாணயக்கார
அரச தலைவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக, அரச தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு வலியுறுத்துவோம் என நாணயக்கார தெரிவித்தார்.
இது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆலோசனை வழங்கியதாக வாசுதேவ நாணயக்கார ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே அரச தலைவருடனும் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், கடன் கால அவகாசம் கோருதல், எந்த சலுகையையும் பெறாத அமைச்சரவையை அமைத்தல் மற்றும் 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய திட்டங்கள் அதில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.