காவல்துறையினர் துரத்தியதில் அப்பாவி குடும்பஸ்தர் பலி : கலவரமாகிய வவுனியா
புதிய இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) நேற்றையதினம் (12) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது குறித்த நபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காவல்துறையினர் வந்தனர்.
இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை காவல்துறையினரின் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், "நீதிவான் இங்கு வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்" என்று தெரிவித்தனர்.
இதனால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் வவுனியா சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கலவரம் ஏற்படுவதற்கான நிலைமை
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், "காவல்துறையினர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்“ என்று விடாப்பிடியாக நின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் கலவரம் ஏற்படுவதற்கான நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இராமசாமி அந்தோனிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் என்று தெரியவந்துள்ளது.
அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் காவல்துறையினரும் களமிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட முயன்ற போது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாரிய சர்ச்சை வெடித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (11) வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாங்கள் வைத்திருந்த தடியை நீட்டி நிறுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது, குறித்த நபர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்ததையடுத்து காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
