கோட்டாபய தொடர்பில் சிறிலங்காவில் பிரபலமடைந்துள்ள பாடல்!
தற்பொழுது நாட்டு மக்கள் மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பி கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வேலை செய்யும் எம் வீரன் என்ற பாடலையே மக்கள் இந்த நாட்களில் அதிகமாகக் கேட்கின்றனர். மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதே கூடுதலாக இந்தப் பாடலை கேட்கின்றனர். இவ்வாறு பாடலை கேட்பவர்களை புலனாய்வுப் பிரிவினர் தேடிச் செல்கின்றனர்.
இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை. பாடல் ஒன்றை கேட்டதற்காக புலனாய்வுப் பிரிவு தேடியதில்லை. இந்தப் பாடலை கேட்டால் புலனாய்வுப் பிரிவினர் சென்று ஏன் பாடலை கேட்டீர்கள் எதற்காக, அரச தலைவரை இழிவுபடுத்தவே கேட்டீர்கள் என வீடு தேடிச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
நான் நினைக்கவில்லை, யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடலை விடவும் இந்தப் பாடல் பிரபல்யமடைந்துள்ளது.
அந்தக் காலத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இந்தப் பாடல் எந்தநாளும் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலை மக்கள் தற்பொழுது அதிகாலை, நள்ளிரவு என நேர வேறுபாடின்றி கேட்கின்றனர் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் இந்தப் பாடல் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பிரச்சாரப் பாடலாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
