அரச அதிகாரிகளின் துணையுடன் கிரவல் அகழ்வு- பாரிய ஆபத்தை எதிர் நோக்குவதாக மக்கள் அச்சம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பிரதேசத்தில் அனைத்து திணைக்களங்களின் அனுமதியோடும் வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி முறைகேடாக அளவுக்கு அதிகமான கிரவல் அகழ்ந்து செல்வது மக்களால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதி மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மண் அகழப்படுவதை அவதானித்ததையடுத்து, அவ்விடத்திற்கு காவல்துறையினரை வரவழைத்த நிலையில் அங்கு அளவுக்கதிகமான கிரவல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பைக்கோ இயந்திரத்தையும் அதனுடைய சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கூழாமுறிப்பு பகுதியில் குறித்த காணி அரச காணி என தெரிவித்து திணைக்களங்கள் அனைத்தினதும் அனுமதியுடன் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கிரவல் அகழ்விற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இருந்த போதும் அனுமதி பத்திரத்தில் வழங்கப்பட்ட நிபந்தனைகளை மீறி வகைதொகையின்றி அதிகளவான கிரவல் அகழப்பட்டு அப்பகுதி பாரிய ஒரு குளம் போன்று மோசமாக மாறி இருக்கின்றது. குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவை விட பல மடங்கு அகழப்பட்டும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் எதுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்களின் அனுமதியில் ஒரு நாளுக்கு சுமார் பதினைந்து டிப்பர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தால், அதனைவிட பல மடங்காக ஒரு நாளைக்கு 200 டிப்பர் அளவில் அகழபடுவதாகவும் இவ்வாறு பாரிய அளவில் இடம்பெறும் அகழ்வால் தமது பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான பின்னணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் குறித்த இடத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சென்று அந்த இடத்தில் செய்தி சேகரித்து ஒட்டிசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒட்டிசுட்டான் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த இடத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி அகழ்வு இடம்பெற்றமையை அவதானித்து குறித்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பைக்கோ இயந்திரத்தையும் அதனது சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பைக்கோ இயந்திரத்தை கொண்டு செல்வதற்கு மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்கள் தடை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். அத்துடன் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.
காவல்துறையினர் ஆவணங்களை கோரிய போதும் ஆவணங்கள் வேறு இடத்தில் இருக்கின்றது என தெரிவித்து சுமார் ஒன்றரை மணி நேரங்களுக்கு மேலாகியும் ஆவணங்கள் எடுத்து வந்து காண்பிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற ஒட்டுசுட்டான் காவல்துறையினர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை அனுமதி வழங்கிய திணைக்களங்கள் ஏன் கண்காணிப்பு செய்யவில்லை குறித்த பகுதியில் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன வனவள திணைக்களம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளை புவிச்சரிதவியல் திணைக்களம் வழங்கிய நிபந்தனைகளை பரிசீலித்து நடவடிக்கை மேகொள்ளவேண்டும்.
தனியார் காணியை முறைகேடாக கிரவல் அகழ்விற்கு வழங்கிய அதிகாரிகள் மீது மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு குறித்த இடத்தில் இடம்பெறும் அகழ்வு பணி தமக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறித்த இடத்தில் அகழ்வு பணியை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.