மே 18 நினைவு கூர்வது எப்படி? தமிழ் மக்களிடத்தில் முக்கிய கோரிக்கை
கொரோனா பரவல் மிகவும் மோசமாக காணப்படுகின்ற சூழலில் அனைவரும் தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகநேரத்தில் முன்னெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன கூட்டாக இணைந்து வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிதப் பேரவலத்தின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்கும் அதேநேரம், பொதுவெளியில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த கட்சிகள் மக்களிடத்தில் கோரியுள்ளது.
இனப்படுகொலைக்கான நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழினம் மீண்டும் கொரோனா போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காதிருப்பதற்காகவே இவ்விதமான தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அக் கட்சியைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக, முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாக, கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.