வடக்கு கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த நிலையில், இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சட்ட விரோத குடியேறிகள்
இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
சட்டவிரோத பயணம் மேற்கொண்ட நிலையில், இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டவிரோதமாக நாடு கடத்த முற்பட்ட உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.
உதவிய நபருக்கு தடுப்புக் காவல்
அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையிலேயே டிசம்பர் 19ம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 104 பேரை மீரிகானவுக்கு அனுப்ப இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
