பதவியேற்று இரண்டே நாட்களில் பதவி விலக முடிவெடுத்த அமைச்சர்! கோட்டாபய விடுத்த கோரிக்கை
கடந்த 18ஆம் திகதியன்று அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவ 20ஆம் திகதியன்று தமது அமைச்சு பதவியில் இருந்து விலகப்போவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
எனினும் அதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவேண்டாம் என்று அரச தலைவர் அவரை கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இந்த தகவலை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், இதனை நாலக கொடஹேவைவிடம் உறுதிபடுத்திக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பதவி விலகல், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையை பாதிக்ககூடும் என்பதால் அது முடிவடையும் வரை இதனை ஊடகங்களுக்கு தெரிவிக்கவேண்டாம் என்றும் அவரை அரச தலைவர் கேட்டுக்கொண்டதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
இதேவேளை தமது அலுவலகத்துக்கு சென்று பணியாற்ற முடியாத அரச தலைவர் இன்று இலங்கையில் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு பதிலாக அரச தலைவர் வீட்டுக்கு செல்லலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அரச தலைவர் கோட்டாபய மற்றும் ராஜபக்சர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மன்னிப்பு கோரும் இடமாக காலிமுகத்திடல் மாறியுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
