புஷ்கரணி தீர்த்த கேணியில் நீராடிய நல்லூர் கந்தனின் கொடியிறக்கம்
புதிய இணைப்பு
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கொடியிறக்கம்
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

இதேவேளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அதனுடன் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளது.
நாளைய தினம் மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் இன்று இடம்பெற்றவண்ணம் உள்ளது.
14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று தற்போது ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும், வெள்ளி எருது வாகனத்தில் சண்டேஸ்வரரும் வெள்ளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி,தெய்வானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் தீர்த்தோற்சவ உற்சவத்தினை கண்டுகளித்தனர்.