400 மில்லியன் டொலர் இந்திய உதவி கிடைத்தும் தீராத துயரம்: நாமல் குற்றச்சாட்டு
கோடிக்கணக்கில் இந்திய உதவி கிடைத்தும் மக்கள் அவல நிலையிலேயே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09-06-2026) உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “டித்வா சூறாவளி தாக்கி 7 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் 35,000-இற்கும் அதிகமான மக்கள் தற்காலிக வீடுகளிலும் வாடகை வீடுகளிலுமே வாழ்ந்து வருகின்றனர்.
அபாயகரமான இடம்
தோட்டப் பகுதிகளில் உள்ள அபாயகரமான இடங்களில் வாழும் மக்களுக்கு மாற்று நிலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் தலையிடவில்லை.

அத்தோடு வீதிகளில் மண்சரிவால் வீழ்ந்த மண்களை கூட இன்னும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாலம் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட (மணல் மூடை) பாலங்கள் அடுத்தடுத்த மழையிலேயே அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள்
கிரிஉல்ல (Giriulla) பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கே அதிகாரிகளுக்கு 7 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன.
இப்பாதிப்புகளுக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து 100 மில்லியன் டொலர் மானியமும் (Grant), மேலும் 300 மில்லியனுக்கும் அதிகமான கடனுதவியும் கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ?
மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்து இழப்பீட்டுத்தொகையை கூட அரசாங்கத்தால் இன்னமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |