பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான புதிய சட்டமூலம் விரைவில்
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்சகுலரத்ன தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதன் பணிகளை முடிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவிடம் (Harshana Nanayakkara) குழுவின் தலைவர் ஒப்படைப்பார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கிடைத்த பிறகு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு மசோதா அடுத்த மாதத்திற்குள் தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது
1979 ஆம் ஆண்டு 48 ஆம் எண் பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 12 ஆம் எண் பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் என திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பயங்கரவாதத் தடை குறித்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, அந்த மசோதா உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
வரைவுச் சட்ட வரைவாளர், வரைவுச் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களை அடையாளம் கண்டு, அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட வரைவுச் சட்டத்தைத் தயாரித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பின்னர், வரைவுச் சட்ட வரைவாளர் தயாரித்த இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, வரைவுச் சட்டத்தை மேலும் மேம்படுத்த பொருத்தமான திட்டங்களைச் சமர்ப்பிக்க ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகமொன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கோரிக்கைக்கு பெறப்பட்ட பதில்களின்படி, இந்தக் குழு 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் ஜூலை 13 வரை 9 முறை கூடியுள்ளது.
எனினும், அந்தக் கூட்டங்கள் குறித்த பதிவுகள் எதுவும் இல்லை என்றும், பரிந்துரைகள் தற்போது விவாத நிலையில் உள்ளன என்றும் நீதி அமைச்சு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
