கிழக்கில் 1,570 ஏக்கருக்குள் பண்ணையாளர்களை முடக்கி புதிய குடியேற்றத் திட்டம்
மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத விவசாய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் உருவாகி உள்ள முறுகல் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு எல்லைப் பகுதி
“மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய வெளியேற்றப்பட்ட நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓரிரு மாதங்களுக்குள்ளேயே குறித்த காணிகளுக்குள் மீண்டும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குழுக்கள் உள்நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதனை தடுக்க முயற்சித்த பண்ணையாளர்களுக்கும் சட்ட விரோதமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் மேற்படி பிரதேசங்களுக்கு பொறுப்பான அரச நிர்வாகமோ, பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு தரப்பினரோ இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் சுமார் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கருக்கு காணிகள் காணப்படுகிறது . இதில் வெறும் 1570 ஏக்கர் காணிகளை மாத்திரமே கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.
மகாவலி அபிவிருத்தித் திணைக்களம்
இது பண்ணையாளர்களின் கால்நடைகளை வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.இன் நிலையில் மீதி காணிகளை மகாவலி அபிவிருத்தித் திணைக்களமும்,வன இலாகா திணைக்களமும் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது.

விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்றில் அது ஒரு நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்கும் திணைக்களமாக உள்ள நிலையில் மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களிலும் அவ்வாற குடியேற்றம் ஒன்றிற்கு மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட ரீதியான அங்கிகாரம் துணை போகுமா அதற்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு வழங்குமா என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஆட்சியாளர்களை மீறி தொடர்ந்தும் எவ்வாறு நடைபெற்று வருகிறது.
எம்மை பொறுத்தவரை இந்த விடயத்தை அரசியலாக்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜெயம்பத் முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது? இதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்