நீதிமன்றில் முன்னிலையாகும் நிக்கோலஸ் மதுரோ! சூடு பிடித்துள்ள வழக்கு விசாரணை
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தம்மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி, இன்று (வியாழக்கிழமை, 26) நியூயோர்க் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு தற்போது தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டச் செலவுகள்
இவர்களுக்கு சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மதுரோவின் சட்டச் செலவுகளைச் செலுத்துவதற்காக வெனிசுலா அரச நிதியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த நிதி முடக்கம், மதுரோவின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும் என அவரது சட்டத்தரணி வாதிடுகிறார். இதனால் வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அடுத்த கட்ட விசாரணை
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், “நான் நிரபராதி. நான் கண்ணியமான மனிதன். என் நாட்டின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி” என்று மதுரோ தெரிவித்திருந்தார்.அவரது மனைவியும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தற்போது, இருவரும் புரூக்ளினில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அவர்கள் பிணை கோரவில்லை. இன்றைய விசாரணையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை திகதி நீதிபதி அல்வின் ஹெல்லர்ஸ்டைன் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |