முள்ளிவாய்க்கால் நினைவு தூபி என்பது பயங்கரவாதம் அல்ல! படையினரை சாடுகின்ற குறியீடும் அல்ல - இம்ரான் காட்டம்
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம்.
அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.
ஆகவே யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்கமாட்டாது.
கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.