தற்கால ஆட்சியில் புதிய அரசியலமைப்புக்கு இடமில்லை - சார்ள்ஸ் நிர்மலநாதன்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalathan) சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
“ இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கு பிறகு வருகின்ற ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்ட வர வேண்டும் என்று முயற்சி செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போதைய அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நிபுணர் குழு ஒன்றை நியமித்த போதும் அரசியலமைப்பு மாற்றம் ஒன்று வரும் என்று நம்பிக்கையில்லை.
சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் யாப்பை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் கொண்டுவராது.
அதற்கு வேறு நாடுகள் மத்தியஸ்தம் வகித்து இன ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்படும் விடயங்களை வலியுறுத்துவதன் மூலமே தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று வரும்.
இல்லை என்றால், இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் முயற்சியில் தமிழர்கள் இன ரீதியாக, கௌரவமாக வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றமும் வராது” என்றார்.
