எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சரிந்துள்ள போதிலும், அதற்கு இணையாக உள்நாட்டில் தற்போதைய எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகளை விளக்குவதற்காக இன்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நுகரப்படும் எரிபொருளானது முன்னதாக அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை திருத்தம்
இதன்படி, அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தீர்ந்த பின்னர், விலை திருத்தம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மாதங்களில் நாம் கொள்வனவு செய்தவற்றையே எதிர்காலத்திலும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கேற்பவே விலை தீர்மானிக்கப்படுகிறது.
அதிக விலைக்கு வாங்கியவற்றை நாம் எதிர்காலத்தில் நுகர வேண்டியிருக்கும் என்பதுடன், குறைந்த விலையிலான இருப்புகளை அதன் பின்னரே பெற்றுக்கொள்ள முடியும். இதற்குச் சற்று காலம் எடுக்கும்.ஆனால், விலைகள் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதற்கமைய, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்காமல், எதிர்காலத்தில் இதே விலையைத் தக்கவைப்பதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |