அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் செயற்பாட்டாளர் ஈரானில் கவலைக்கிடம்
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் போராடி வரும் 50 வயதான நர்கீஸ் முகமதிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அரசுக்கு எதிராக செயல்பட்டதற்காக கடந்த 2021 முதல் சிறையில் இருந்து வரும் அவருக்கு உடல்நலக்கோளாறுகளுக்கு சிகிச்சை பெற கடந்த 2024 மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த டிசம்பரில் செயல்பாட்டாளர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடம்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்தபோது நர்கீஸ் முகமதி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ஒக்ஸிஜன் உதவி வழங்கப்பட்டு வடமேற்கு நகரமான ஜன்ஜன்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது அறக்கட்டளை தெரிவித்துள்ளது.இதற்கு முன்னரே அவருக்கு மூன்று முறை ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 140 நாட்களாக அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
உடல்நிலை மோசமடைய முக்கிய காரணம்
டிசம்பரில் கைது செய்யப்பட்ட போது அதிகாரிகள் அவரது வயிறு, தலை மற்றும் கழுத்தில் பலமாகத் தாக்கியதாகவும், அந்த காயங்களே தற்போது அவரது உடல்நிலை மோசமடைய முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஜன்ஜன் நகரில் போதிய வசதிகள் இல்லாததால், அவரை உடனடியாகத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் ஈரான் உளவுத்துறை அமைச்சகம் இதற்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |