நல்லூரில் அசைவ உணவகம் - தகுதி இழக்கும் யாழ். மாநகர சபை - சாடும் பார்த்தீபன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய (Nallur Kandaswamy temple) நிர்வாகத்தினால் வழங்கப்படும் உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ளும் தகுதியினை யாழ்.மாநகர சபை இம்முறை இழந்து விட்டதாக மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவக விவகாரம் தற்போது பேசுபொருளாக உள்ளதுடன் யாழ் மாநகர சபை மீது பாரிய விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவிக்கையிலேயே வரதராஜன் பார்த்திபன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபை
தனது பதிவில் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 29ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சம்பிரதாய முறைப்படி முதலாவது காளாஞ்சி யாழ்ப்பாணம் மாநகர சபையினருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு வழங்கப்படவுள்ளது.
வருடாவருடம் பாரம்பரிய முறைப்படி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் யாழ்.மாநகரசபைக்கு வழங்கப்படுகின்ற இவ் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொள்கின்ற யாழ்.மாநகர சபை அதற்கு ஏற்றாற்போல் ஆலயத்தின் புனிதத் தன்மையை பேணி பாதுகாத்து வந்தது.
அந்த புனிதத் தன்மையினை முன்னாள் ஆணையாளர்களாக இருக்கட்டும் முன்னாள் முதல்வர்களாக இருக்கட்டும் அவர்கள் தொடந்தும் அந்த புனித்தன்மையினை பேணிவந்தார்கள் என்பது கடந்த காலங்கள்.
நல்லூர் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவிற்கான யாழ்.மாநகர சபைக்கு காளாஞ்சி வழங்கும் நிகழ்வுக்காக யாழ்.மாநகர சபை வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அப்பகுதி எங்கும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அப்பகுதியின் புனிதத்தன்மை பேணப்படும் இது நடைமுறை.
காளாஞ்சி வழங்கும் நிகழ்வுக்காக
ஆனால் எதிர்வரும் செய்வாய்கிழமை காலாஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், இம் முறை மாநகர சபைக்கு முன்னால் ஒரு அசைவ உணவகத்தினை வைத்துக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை யாழ்.மாநகர சபை செய்யவுள்ளது மிக வேதனையான விடயம்.
முன்னால் மாமிசக் கடை யாழ்.மாநகர சபை வாசல் தொடக்கம் நிறைகுடம் வாழை தோரணம் மஞ்சள தண்ணி விசிறல் என்று காலாஞ்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகள்.
அந்த வகையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற அவ்உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்ளும் தகுதியினை யாழ்.மாநகர சபை இம் முறை இழந்து விட்டது.
இன்னமும் நாட்கள் இருக்கின்றன இவ் விடயத்தில் யாழ்.மாநகர சபை உடனடியாக செயற்பாட்டு யாழ்.மாநகர சபையின் கௌரவத்தினை மீள் நிறுத்த வேண்டும் குறித்த வியாபார ஸ்தலத்தில்
1. உணவு கையாளுதலுக்கு அனுமதி இல்லை
2. உணவகத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லை
3. முறையான அனுமதி பெறப்படாதா வியாபார தலம்
4. அனுமதியில்லாத கட்டிடம்
5. வீட்டு மனைக்கான அனுமதியினை எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் வியாபார ஸ்தலமாக மாற்றியமை
6. வீதி எல்லைக் கோட்டுக்குள் மிகப் பெரிய நிரந்தர விளம்பரப்பலகை இவ்வாறு பல விதி மீறல்கள் காணப்படுகின்றன.
இவ்விடயத்தில் மாநகர சபை தன்னுடைய அசமந்த போக்கினைத் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் பாரம்பரிய முறைப்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை நல்லூர் கந்தப் பெருமானினால் வழங்கப்படுகின்ற உயரிய கௌரவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் தங்களை தகுதியுடையவர்களாக நிரூபணம் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
