பிளவுபட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் - பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சிறிலங்கா அமைச்சர் அழைப்பு!
வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிலங்கா அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“உள்நாட்டுப் போர் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து பெருமளவிலான தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் செல்வந்தர்கள் தத்தமது நாடுகளில் தனிநபர்களாவும், அமைப்புக்கள் ரீதியாகவும் செயற்பட்டு வருகின்றார்கள்.
புலம்பெயர் அமைப்புகளுக்குள் பிளவு
எனினும், அவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை. இங்கு தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பதுபோல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும், தனிநபர்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன.
இலங்கை விவகாரத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமது நாடு மீண்டெழ தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க அவர்கள் முன்வர வேண்டும்.
இலங்கையில் முதலீடு
அவர்களில் சிலர் தற்போது தாமாகவே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளார்கள். அவர்களைப் போல் ஏனைய புலம்பெயர் தமிழர்களும் ஒன்றுபட்டு இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும்.
இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் அவர்கள் தயக்கம் எதுவும் காட்டக்கூடாது. அவர்களுக்கு சிறிலங்கா அரசு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்.
எமது நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அனைத்துத் தரப்பினரும் உதவிகளை வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
