மக்களின் காணிகள் மக்களுக்கே! பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று முன் தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (26.05.2026) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
மக்களின் காணிகள் மக்களுக்கே
இதன்போது இடம்பெற்ற கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய 'மக்களின் காணிகள் மக்களுக்கே' என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளாகிய அனைவரினதும் பொறுப்பாகும்” என கூறியுள்ளார்.
இதன் பின்னர் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.
அத்துடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரும் தமது துறைசார்ந்த காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள்
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |