22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு
தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
மனு மீதான விசாரணை
இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |