இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளை காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம் - பொது அமைப்புகள் கோரிக்கை
தற்பொழுது நுவரெலியாவில் இயங்கிவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளை காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம் என நுவரெலியாவில் இயங்கிவரும் 13 பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா - மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய தொகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒரு மத்திய இடமாக ஆணைக்குழுவின் நுவரெலியா காரியாலயம் உள்ளது.
அங்குள்ள காரியாலயத்துக்கு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேச மக்களும் வருகை தந்து, தங்களது தேவைகளை இலகுவான முறையில் நிறைவேற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
பொதுமக்களுக்கு சிரமம்

இந்த நுவரெலியா காரியாலயத்தை ஹட்டன் நகருக்கு மாற்றினால் வலப்பனை, ஹங்குராங்கெத்த போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் நுவரெலியாவுக்கு வருகை தந்து, அங்கிருந்து ஹட்டன் சென்று, மீண்டும் வலப்பனை ஹங்குராங்கெத்த போன்ற பிரதேசங்களுக்கு திரும்பிச் செல்லவேண்டிய சிரமமான நிலை காணப்படுகிறது.
இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நுவரெலியா காரியாலயம் நுவரெலியாவிலேயே அமைந்திருக்கச் செய்யுமாறு நுவரெலியாவில் இயங்கும் 13 சமூக அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கையொப்பமிட்டு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் எல்.டி.பீ. தெய்தெனியவுக்கும் ஆணையாளர்களான நிமலசேன கார்த்திய புஞ்சிஹேவா, நய்யமுத்து தனராஜ், விரிவுரையாளர் பாத்திமா பர்ஸானா ஹனிபா, விரிவுரையாளர் கெயான் தினுக் குணதிலக்க ஆகியோருக்கு இந்த கோரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா லயன்ஸ் கழகம், நுவரெலியா ரோட்டரி கழகம், நுவரெலியா வை.எம்.எம்.ஏ கழகம் (YMMA), நுவரெலியா ஐக்கிய சர்வமத சங்கம், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, வொயிஸ் ஒப் நுவரெலியா, மார்ச் 12 அமைப்பு, நுவரெலியா ஐக்கிய வர்த்தக சங்கம், நுவரெலியா மாவட்ட சிவசக்தி பவுண்டேஷன், நுவரெலியா தேசிய பெண்கள் அமைப்பு, நுவரெலியா சமாதான நீதவான் சங்கம், சிவில் பாதுகாப்பு அமைப்பு, நுவரெலியா மனித அபிவிருத்தி சங்கம், நுவரெலியா சமாதான பேரவை ஆகிய 13 பொது அமைப்புகளின் பிரதிநிதிகளே ஆணைக்குழுவின் நுவரெலியா காரியாலயத்தை ஹட்டனுக்கு இடம் மாற்ற வேண்டாம் என கையொப்பம் இட்டுள்ளனர்.
