புதிய வைரஸ் திரிபு தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை
ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸின் திரிபு நாட்டிற்குள் பரவ முடியும் என்பதால், நாட்டிற்குள் வரும் அனைவரையும் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இப்படியான நேரத்தில் மரபணு பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது முக்கியம் என மருத்துவ துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் திரிபு நாட்டுக்குள் பரவுவதை தடுக்க அரசாங்கம் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆறு நாடுகள் தொடர்பாக கடுமையாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மூன்று நாட்களுக்கு முன்னரே இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது. சுகாதார அமைச்சும் இது குறித்து விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.
உலகம் வீரியம் கொண்ட கொரோனா திரிபை கண்டறியும் முன்னரே இலங்கை பூஸ்டர் தடுப்பூசியை வழங்கியது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அரசாங்கமும் இந்த விடயத்தில் விசேட அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார கண்காணிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வருகை தரும் சகல விமான பயணிகளின் சுகாதார நிலைமைகள் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் விசேட மென் பொருள் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.