மட்டக்களப்பில் பலவந்தமாக பிள்ளையானால் கையகப்படுத்தப்பட்ட வீடு தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் வீடு ஒன்றை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து, தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் போதே நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்து வந்த வீட்டிற்குள் கடந்த 30 வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார். மட்டக்களப்பு நீதிமன்றில் அதற்கு எதிராக வழக்கினை நான் தொடுத்திருந்தேன். இன்று எனக்கு நீதி கிடைத்திருக்கின்றது. மேலும் நீதிமன்றில் தாங்கள் மூன்று கோடிக்கு மேல் செலவழித்திருந்ததாகவும் அதனைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னுமொருவருடைய காணிக்குள் பலவந்தமாக சென்று இருந்துவிட்டு அதற்குள் நாங்கள் மூன்று கோடி செலவிட்டுள்ளோம் என்று கூறுவது நியாயம் அற்ற விடயம் என எடுத்துக்காட்டப்பட்டது.
எனது வீடு ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க வீடு. தயாரின் தந்தையார் தமிழரசுக் கட்சியின் செனட் சபை உறுப்பினரான மாணிக்கம் வாழ்ந்த வீடு. அந்த வீட்டுக்கு பல ஆண்டுகால வரலாறு இருக்கின்றது. குறித்த வீட்டினைவிட்டு எழும்பி அந்த வீட்டினை என்னிடம் ஒப்படையுங்கள் என்று நான் பிள்ளையானிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது குறித்த வீட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றோம், வீட்டினை விற்றுவிடுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் பிறந்து வளர்ந்து எனக்கு 14வயது வரையில் நான் வாழ்ந்த வீடு அது. அந்த வீட்டினை விற்பதற்கு எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.
முக்கியமாக அரசியலில் இருக்கும் நான் கூட மிகவும் கஸ்டத்தின் மத்தியிலேயே இந்த வழக்கினை முன்னெடுத்தேன்.
இலட்சக் கணக்கில் எனக்கு செலவு ஏற்பட்டது. இறுதியாக மட்டக்களப்பு நீதிமன்றம் உண்மையினை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கின்றது. நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பினை மதிப்பதற்கான சந்தர்ப்பம் பிள்ளையானுக்கு கிடைத்திருக்கின்றது.
இன்னொருவரின் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு நான் எவ்வளவு வேண்டுமானாலும் தருகின்றேன் எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்பது தவறான விடயமாகும்.
அவர் நாமல் ராஜபக்ஸ ஊடாகவும் அந்த வீட்டினை விற்குமாறு என்னிடம் கூறியிருந்தார். நான் அவருக்கு தெளிவாக கூறினேன் உங்களது வீரஹெட்டியவில் இருக்கும் வீட்டினை விற்பீர்களா. அதேபோல் தான் இது எனது பாரம்பரிய வீடு, அதனை விற்கமுடியாது என கூறியிருந்தேன்.
இன்னும் சில வாரங்களுக்குள் அந்த வீட்டுக்குள் நாங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பினை மதித்து பிள்ளையான் வீட்டினை என்னிடம் ஒப்படைத்தார் என்றால் அது நன்றாக இருக்கும்.
காலத்தினைப் போக்குவதற்காக சில வாரங்கள், சில மாதங்கள் இருக்க வேண்டும் என்று செயற்படுவாரானால் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கையினை நான் முன்னெடுப்பேன்.
30 வருடமாக எனது வீட்டுக்குள் போகமுடியாத நிலை காணப்பட்டு மீண்டும் போவதற்கான சந்தர்ப்பம் வரும்போது நான் அதனை விட்டுச்செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.