மட்டக்களப்பில் புதையல் தோண்டியவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சத்தை தண்டப்பணம் செலுத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (17) உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றில் வாகனேரி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தனர்.
3 வருட சிறை தண்டனை
குறித்த நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து வழக்கு இடம் பெற்று வந்துள்ளது இதனையடுத்து குறித்த வழக்கு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு தலா ஒருவர் 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேரும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் அதனை செலுத்தாத பட்சத்தில் 3 வருட சிறை தண்டனை என நீதவான் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
