இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு - 200க்கும் மேற்பட்டோர் கைது!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் கடந்த தினங்களில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
200இற்கும் மேற்பட்டோர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 200கஇற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல்துறை பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தொண்டர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், கட்சி அலுவலக ஊழியர்களின் வீடுகளையும் சோதனையிட்டதாக கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இம்ரான் கானின் 10இற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதேவேளை இம்ரான் கான் அட்டோக் சிறையில் மோசமான முறையில் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இம்ரான் கானை சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கூறுகையில்,
''ஈக்களை வரவைப்பதற்காக சிறை அதிகாரிகள் இனிப்புகளை அறைக்குள் வீசியதால் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் , அவர் வீட்டில் இருந்து உணவு மற்றும் தொழுகை செய்வதற்கான தரைவிரிப்பு கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை, திறந்த கழிப்பறை காணப்படுகின்றது'' எனவும் அவர் கூறினார்.