இலங்கையர் கொடூரக் கொலை; தென்னிலங்கையில் பதற்றம்- முற்றுகையிடப்பட்ட பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம்!
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நடு வீதியில் எரிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியந்தவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தன.
பாகிஸ்தான் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் நீதி கோரியுள்ள நிலையிலேயே, கொழும்பில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரியந்த குமார தியவடனவின் எரிக்கப்பட்ட சடலம் இன்று மாலை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானத்தில் அவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இவரது சடலம் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஃபவாட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.