பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி
சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை, சட்டமா அதிபர் திணைக்களம் மேற்பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விசாரணை
குறித்த வழக்கு, அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வழக்கு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, நிட்டம்புவ தலைமையக காவல்துறை விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விசாரித்துள்ளார்.
இதன்போது, நிட்டம்புவ தலைமை காவல்துறை பிரதம ஆய்வாளர் பி.எம். அனுர குணவர்தன, இச்சம்பவம் தொடர்பான முதல் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாகவும், இரண்டாவது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை விரைவில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபரான தேரர், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அச்சிறுமியின் தாயார் ஆகியோரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பிரதம ஆய்வாளர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஒரு திகதியை வழங்குமாறும் பிரதம ஆய்வாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வாதங்கள்
சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ, இச்சம்பவம் இன்னும் விசாரணையில் இருப்பதால், சிறப்பு வாதங்களை முன்வைக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை கண்காணிக்கும் நன்னடத்தை அதிகாரி, அந்த சிறுமி தற்போது உளவியல் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், நன்னடத்தை துறையின் மேற்பார்வையில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்னடத்தை அதிகாரி, குறித்த சிறுமி உள்ள இடத்தை வெளியிட முயன்றபோது, நீதவான் அதனை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவருக்கு வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்