நாடாளுமன்றத்தில் எதிரணி எம்.பிக்கள் போராட்டம் - நேரலை
மூன்றாம் இணைப்பு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் அதிகாரிகளுக்கா, மக்களுக்காக, சட்டம் எங்கே சட்டம் எங்கே? நாட்டுக்கு ஒரு நீதி - மலையக மக்களுக்கு இன்னொரு நீதியா போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் இணைப்பு
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று (22) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
நேரலை
இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றம் இன்று (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது.
நாடாளுமன்றத்தை இன்று (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வு

இன்று மு.ப 09.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழான 2324/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.
ஓகஸ்ட் 23ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2336/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2339/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அனுதாபப் பிரேரணை

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான காலப் பகுதியில் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5.30 மணி வரை இலங்கை கிரிக்கெட நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும். ஓகஸ்ட் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஏ.ஆர். மத்துமபண்டார, பி. சிறிசேன குரே மற்றும் உடவத்தே நந்த தேரர் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது.
மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.