சொக்லட்டில் மீட்கப்பட்ட மனித விரல் - வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் நேற்று (05) கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனித விரலின் துண்டு

இது தொடர்பான விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளதுடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்படவுள்ளது.
மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.