10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்
தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
10 அரசியல்வாதிகள்
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர், பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நேரமாக விசாரணை
நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening