வாகன மோசடியில் ஈடுப்பட்ட நபர் ஓராண்டுகளின் பின் கைது
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , போலியான காசோலை ஒன்றினை கொடுத்துவிட்டு தலைமறைவாகிய நபரை ஓராண்டுகளின் பின்னராக யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்த நபர் ஒருவர் பணத்திற்கு பதிலாக காசோலையை கொடுத்துள்ளார்.
பின்னணி

இந்நிலையில், வாகனத்தினை விற்ற நபர் , காசோலையை வங்கியில் வைப்பிலிட்ட போது , அந்த கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது.
வாகனத்தை வாங்கிய நபர் , வாகனத்தோடு தலைமறைவாகி இருந்த நிலையில் , வாகனத்தை விற்றவர் அது தொடர்பில் , யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் காசோலை மோசடி செய்தவரை சுமார் ஓராண்டு கால பகுதிக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் வாங்கிய வாகனம் மாவிட்டபுரம் பகுதியில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் மின்னொழுக்கு ஏற்பட்டு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேகநபரை யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.