அவுஸ்திரேலியா செல்ல போலி விசா :90 இலட்சத்தை சுருட்டியவர் சிக்கினார் : தமிழர் பகுதியில் சம்பவம்
அவுஸ்திரேலியா அனுப்புவதாக தெரிவித்து இளைஞர் ஒருவருக்கு போலி விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை சுருட்டிய ஒருவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞரே பாதிக்கப்பட்டவராவார். திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவரே பணத்தை சுருட்டியவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு
மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞனை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து போலி விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் தான் வழங்கிய விசாவில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாது எனவும் இந்தியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லுமாறும் இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.இதனை நம்பி இந்தியா சென்ற இளைஞன் அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமான மூலம் செல்ல முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு
அதனையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார். இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்