கைபேசிக்கு விசேட விலைக்கழிவு - போலியான விளம்பரம் மூலம் யாழ். இளைஞனிடம் பண மோசடி
விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை செய்யப்படும் என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கையைச் சேர்ந்த பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் குறித்த விளம்பரத்தினை நம்பி இலட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு - 02, கல்முனை என்ற முகவரியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகளின் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை
இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைபேசியை வீட்டுக்கு கொண்டு சென்றே வழங்குவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்புச் செய்துள்ள நிலையில் அதன்பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இது சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்றையதினம் (06) வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனை காவல்துறையினர் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

