ரணில், சஜித்தை எதிர்த்து சிறிலங்காவில் உருவெடுக்கும் புதிய சக்தி
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்காத புதியதொரு கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஏனைய அரசியல் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவுடன் இன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொது நிலைப்பாடு

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அத்தியவசியமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு சில சூழ்நிலைகளில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
இதற்கான ஒரு பொது கூட்டணியை நாம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு சில தீர்மானங்களை எம்மால் இணைந்து மேற்கொள்ள முடியும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டும். இவை தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு நாம் அனைவரும் வர வேண்டும்.
கூட்டணி அமைக்கும் முயற்சி குறித்து நாம் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சியுடன் அண்மையில் இது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று சுதந்திர மக்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் நாம் ஆதரவளிக்க மாட்டோம் என்பது எமது பொது நிலைப்பாடு” - என்றார்.