இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உறுதிமொழி
சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் 23 பேரும் இன்னும் பத்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் ஒருவர் இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன தமிழக கடற்தொழிலாளரின் உடலம் இன்று வடக்கில் கரையொதுங்கிய நிலையில், சிறிலங்கா தரப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் தமிழக இழுவைப்படகுகளை மையப்படுத்திய முறுகல்நிலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களின் நிலைமை குறித்து அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதனையடுத்து கைதான 23 கடற்தொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே குரல்கொடுத்துள்ளன.
இந்தப் பிரச்சினையில், உடனடியாக பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்த பிரச்சினைக்கு தீர்வுகோரியுள்ளார்.
இந்திய சிறிலங்கா இராணுவத்தின் எட்டாவது கூட்டுப் பயிற்சி நடத்திய நிலையில் தமிழக கடற்தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.