யாழில் ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்: வெடித்தது சர்ச்சை!!
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் (11) வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
ஆலய வழிபாட்டிற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.
பிரதமரின் பாதுகாப்பு
இதன்போது, பிரதமரின் பாதுகாப்புக்காக ஆலய சூழலில் பெருமளவான காவல்துறை விசேட அதிரடி படையினர் , பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் சப்பாத்துகளுடன் ஆலய வளாகத்தினுள் கடமையில் ஈடுபட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை , ஆலயத்தினுள் பிரதமர் வழிப்பாட்டிற்காக சென்ற வேளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்கள் மேலங்கிகளுடன் ஆலயத்தினுள் பிரவேசித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிரடி படையினர்
பிரதமருடன் சென்றிருந்த கடற்தொழில் அமைச்சர் இரா சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் மேலங்கிகளை கழட்டி விட்டு சென்ற போதிலும் , பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பிரிவினரும் மேலங்கியுடன் சென்று இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதமரின் வருகைக்காக அதிகாலை வேளை குவிக்கப்பட்டிருந்த காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களை உடற்சோதனைக்கு உட்படுத்தி , கெடுபிடிகளை அதிகரித்தமையால் , பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கி இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அது தொடர்பில் ஆலய பிரதம குருக்களால் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


