ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் முதல் கருத்து! காசா மீது திரும்பும் உலகத்தின் கவனம்
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிடும் வரை, தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள மஞ்சள் கோட்டில் (Yellow Line - கற்பனை எல்லைக் கோடு) இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட முதலாவது அதிகாரப்பூர்வ கருத்தாக இது அமைந்துள்ளது.
“காசா பகுதியில் இராஜதந்திர முன்னேற்றங்கள் தொடர்பாக இன்று காலை வெளியான பல்வேறு தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பு உண்மையான முறையில் ஆயுதங்களை கைவிடும் வரை, தற்போதைய ‘மஞ்சள் கோட்டில்’ இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் விலகாது என்பதை இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்துகிறது” என IDF அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இதற்கிடையில், இஸ்ரேல் தனது கடமைகளை நிறைவேற்றி, அக்டோபர் மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தனது படைகளை ‘மஞ்சள் கோடு’ வரை பின்வாங்கினால், அதற்கேற்ப ஹமாஸ் ஆயுதக் களைவை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘மஞ்சள் கோடு’ என்பது 2025 ஒக்டோபர் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் படைகள் பின்வாங்கிய பின்னர் உருவாக்கப்பட்ட எல்லைக் கோடாகும்.
இந்தக் கோடு காசா பகுதியின் சுமார் 53 சதவீதத்தை உள்ளடக்கியதாக இருந்தது. எனினும், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்தி வருவதால், இந்தக் கோடு மத்திய தரைக்கடல் கடலை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் காசா மக்களின் வாழ்விடப் பகுதி மேலும் சுருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் பல கட்ட சமாதானத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதில், ஹமாஸின் ஆயுதக் களைவும், இஸ்ரேல் படைகளின் நிலைமாற்றமும் முக்கியமான அடுத்த கட்டங்களாகக் கருதப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |