டயகம சிறுமியின் சடலத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு- நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்டத்தின் பொது மயானத்திற்கு இன்று முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அக்கரபத்தனை - டயகம தோட்டத்தைச் சேர்ந்த ஹிஷாலினி ஜுட் குமார் என்ற சிறுமி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் ஹிஷாலினியின் பெற்றோர்கள் கொழும்பில் உள்ள மனித உரிமை திணைகளத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர். இம்முறைப்பாட்டில் தனது மகளுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றதாகவும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என முறைபாட்டில் பதிவு செய்துள்ளார்.
சம்மந்தப்பட்ட சிறுமியின் விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது. இதன்போது நீதிபதி ஹிஷாலினியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.
இதற்கமைய இன்றைய தினம் மேலும் பல்வேறுப்பட்ட தகவல்களை திரட்டும் வகையில் கொழும்பு வடக்கு பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், டயகம பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டனர்.
நல்லடக்கம் செய்யப்பட்ட ஹிஷாலினியின் சடலம் எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.










