இலங்கை வரும் வெளிநாட்டவர்க்கு காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் (IDP) அல்லது சொந்த நாட்டில் உள்நாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டினர் இலங்கையில் எந்த வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் வூட்லர்(ASP F. U. Wootler) நினைவூட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக முச்சக்கர வண்டிகளை ஓட்டும் சுற்றுலாப் பயணிகளை காவல்துறை அதிகளவில் கவனித்து வருவதாக அவர் கூறினார். "பல வெளிநாட்டினர் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம், இது சட்டவிரோதமானது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
நாட்டில் வாகனங்களைப் பயன்படுத்தும் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் இருவரும் இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பல வெளிநாட்டினர் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தால் வாகனம் ஓட்டலாம்
காவல்துறையின் கூற்றுப்படி, செல்லுபடியாகும் சர்வதேசசாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் வெளிநாட்டினர் இலங்கையில் சட்டபூர்வமாக வாகனம் ஓட்டலாம். தங்கள் சொந்த நாடுகளில் வழங்கப்பட்ட உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பவர்களும் வாகனம் ஓட்டலாம், ஆனால் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் சான்றிதழ் அல்லது ஒப்புதலைப் பெற்ற பின்னரே என அவர் மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |